Wednesday, March 25, 2009

எனை வாழ பணித்தவை..



  • எனக்கான என் அம்மாவின் கண்ணீர்,
  • என் பிள்ளை எனை வெல்லும் நொடி,
  • பேத்தியின் கைபிடியுள் மரணம்,
இவை மூன்றும் எனை வாழ பணித்தவை..

Tuesday, March 24, 2009

பேனா மூடி



தொட்டான்,
இதழ் பதித்தான்,
கொணரும் வரை
புணர்ந்தான் புண்ணாக்கினான்.-நான்
பெண்டாட்டியும் பேனா மூடியும்

Saturday, March 21, 2009

என் ஜன்னல் வழி உலகம்

>>கால மாற்றத்தால் கரைந்து போன
திண்ணையில் வெற்றிலை பாக்கினோடு
தெருவின் மொத்த சங்கதிகளையும்
மென்று தின்னும் இரண்டு
காது வளர்த்த பாட்டி;

>>ஆண்கள் ஆங்காங்கே அலைவது
தெரிந்தும் கூட,
பாத அசைவுகள் இடுப்பு வரை நீண்டு
வெயிலுக்காக நாணி செல்கிறாள்
இக்கால பெண்ணொருத்தி..

>>ராத்திரி மறந்ததால்
பல நிமிட முயற்சிக்கு பிறகு
தெருக்குழாயில் குடம் நிறைய
காற்றை சுமந்து போகிறாள்
எதிர் வீட்டு அத்தை.

>>கறிக்கடை குப்பையினை கிளறிச்
சோர்ந்த காகம் ஒன்று
அடுத்த வீட்டு அய்யருக்கு
அப்பாவை மாறி அமாவாசை சோறு தின்கிறது.

>>ஒட்டியிருந்த உப்பினை அவர்
உடல் நீர் கரைக்க தள்ளாடி
தள்ளி வருகிறார், பதினைந்து ஆண்டுகளாய் '
உப்'பென்று கத்திக்கொண்டு
காலியாகாத மூட்டையுடன்
ஒரு உப்புக்காரர்.

>>குப்பை வண்டிக்காரன் தாமதத்தை
தொண்டை கிழிய சொல்லிகொண்டிருந்தது ,
நிறைந்து வழிந்து ஈ மொய்த்து
கொண்டிருந்த குப்பை தொட்டி.

>>வெகு நேரமாய் அழுத்தி பிடித்திருந்த
ஜன்னல் கம்பி உறுத்தியதால்
அனிச்சையாய் கைகளை
நோட்டமிட்டதில் கம்பியின் தடமும்
என் ரசனைக்கு பலியாகி
இரு எறும்புகளின் சடலமும்,
பிரிய மனமில்லாமல் அடைத்து செல்கிறேன்

என் ஜன்னல் வழி உலகத்தை..

இதுவும் ஒன்று

ஒவ்வொரு முறையும் நான் கவிஞனாய்
பிரசவிக்கும் போதெலாம் -என் பிள்ளை
எவன் ஜாடையிலேனும் இருந்து விடுமோ
என்ற ஐயத்தில் கருக்கலைத்துவிட்ட
சில நூறு கவிதைகளில்
இதுவும் ஒன்று (கமலஹாசன்
,கண்களை ஒத்திருப்பதாக எண்ணி)..