Sunday, November 8, 2009

கவிதை வேதாளங்கள்!





இப்பொழுதேலாம் நான் எழுதும் கவிதைகளில் புதுமையாய் எதுவும் இல்லை எழுத வைத்தவள் மட்டும் தான்..


என்னை ஒன்றுமே செய்யாமல் நீ மட்டும் எப்படி!! பிடித்தவளும் பிடிக்காதவளுமாய் மாறி மாறி போகின்றாய்..



பிடியில்லா ராட்டினம் அவள் பார்வை, ஏனோ ஒவ்வொரு முறை தூக்கி எறியப்படும் போதும் சிரித்து கொண்டே விழுகிறேன்


நான் ரசிததவைகளில் இந்த பூ மட்டுமே என்னை திருப்பி கேட்டது "ஏன் அப்படி பார்கிறாய் என்னை"



என்னவள் என் காது திருகும் அழகை ரசிக்கவே நான் சேட்டை செய்ய பழகிகொண்டேன்


ஒவ்வொரு முறையும் கவிதை வேதாளங்கள் விரும்பி ஏறும் முருங்கை மரம் காதலாகவே இருக்கிறது..


உதிரா சிறகுகள்!!


"இன்னும் எழுபது ஆண்டுகள் கழித்து நீ
என்ன செய்து கொண்டிருப்பாயோ தெரியாது!
ஆனால் கண்டிப்பாக நான்,

உன் உதிர்ந்த நரை முடியெல்லாம் சேகரித்து,
ஒரு நாள்; வெள்ளை மயிலிரகென காட்டி,
உன் பொக்கை வாயில் புன்னகை பிடிங்கி கொண்டிருப்பேன்"

Wednesday, October 14, 2009

சென்னை புரட்சி!



மதிய உணவுத்தட்டில் சோற்றுக்குள் இருந்து
மீட்கப்பட்டு; பிடிக்காத காய்கறிகளின் வரிசையில்
அமர்த்தப்பட்ட; பெயர் தெரியா பூச்சி ஒன்று கேட்டது!
"எப்படி!! மாறி விட்டாய் நீ!! "

Monday, July 20, 2009

உலர்ந்த முத்தங்கள்


நான் தவழ்ந்து நிமிர்ந்து

என் தாய் நுகர்ந்து அவளை

முத்தமிட எத்தனித்த நேரம்

என் அண்ணனும் ,அப்பனும்

எனக்கு போட்டி அங்கே!

தாளாமல் அழுதே விட்டது என் முத்தம்..

இதயத்தின் அடி சுவற்றில் உறைந்து

போன அந்த பழைய முத்தங்கள் இன்று உனக்காக!



பிறகு அவளை தான் உனக்கு தெரியுமே!

என் பள்ளி பருவத்து பக்கத்து வீட்டுக்காரி.

நான் தந்த மூன்று சிலேட்டு குட்சிகளுக்கு

பரிசாய் தந்தால் ஒரு முத்தம்,

எப்படியாவது திருப்பி தந்து விட துரத்தினேன்.

எங்கோ ஓடி ஒழிந்து கொண்டால் சதிகாரி!

இந்தா உன் சிறு வயது சக்களத்தியின் முத்தம்

அதையும் நீயே வைத்து கொள்!!




பின்பு என் பதின் வயதுகளில்

மாமன் மகளுக்கு தந்திருக்க வேண்டிய

திருட்டு முத்தங்கள் சில,

அப்படி எவளும் இல்லாததால்,

இந்தா! அவைகளும் உனக்கே!



பின் சொல்ல மறந்து விட்டேன் பார்!
உன்னை போல் பொறுமை
இல்லை உன் மகளுக்கு ,
என் மீசையை இழக்க மனமில்லாமல்
அவளுக்காய் சேமித்து வைத்திருந்த சிலநூரு
முத்தங்கள்! அவைகளும் உனக்கே!


*கடைசியாய் நேற்றிரவு நம் பேத்திக்கு
நான் தந்த முத்தம்,
ச்சீ!! எச்சி, என்று அவள்
கன்னத்தில் இருந்து பிடுங்கி
என் சட்டை பைக்குள் திணித்துச் சென்றாள்,
என் நிழலே! வேறெங்கு போவேன் நான்!
அதையும் உனக்கே தந்து விடுகிறேன் !


என் முதலும் முடிவும் உன்னால்
மட்டுமே நிரப்ப பட்டிருப்பதை
வேறெப்படித்தான் சொல்லச்சொல்கிறாய்.. என்னை!!

என் இமைக்காத சில நொடி

பார்வைக்கே அவ்வளவு அலட்டி கொள்வாயே!

இன்று உன் முகச்சுருக்கம் முழுக்க

நான் தந்த முத்தங்களுக்காகவாவது

கண் விழித்து கொள்ளேன் கண்மணியே!!!


Wednesday, March 25, 2009

எனை வாழ பணித்தவை..



  • எனக்கான என் அம்மாவின் கண்ணீர்,
  • என் பிள்ளை எனை வெல்லும் நொடி,
  • பேத்தியின் கைபிடியுள் மரணம்,
இவை மூன்றும் எனை வாழ பணித்தவை..

Tuesday, March 24, 2009

பேனா மூடி



தொட்டான்,
இதழ் பதித்தான்,
கொணரும் வரை
புணர்ந்தான் புண்ணாக்கினான்.-நான்
பெண்டாட்டியும் பேனா மூடியும்

Saturday, March 21, 2009

என் ஜன்னல் வழி உலகம்

>>கால மாற்றத்தால் கரைந்து போன
திண்ணையில் வெற்றிலை பாக்கினோடு
தெருவின் மொத்த சங்கதிகளையும்
மென்று தின்னும் இரண்டு
காது வளர்த்த பாட்டி;

>>ஆண்கள் ஆங்காங்கே அலைவது
தெரிந்தும் கூட,
பாத அசைவுகள் இடுப்பு வரை நீண்டு
வெயிலுக்காக நாணி செல்கிறாள்
இக்கால பெண்ணொருத்தி..

>>ராத்திரி மறந்ததால்
பல நிமிட முயற்சிக்கு பிறகு
தெருக்குழாயில் குடம் நிறைய
காற்றை சுமந்து போகிறாள்
எதிர் வீட்டு அத்தை.

>>கறிக்கடை குப்பையினை கிளறிச்
சோர்ந்த காகம் ஒன்று
அடுத்த வீட்டு அய்யருக்கு
அப்பாவை மாறி அமாவாசை சோறு தின்கிறது.

>>ஒட்டியிருந்த உப்பினை அவர்
உடல் நீர் கரைக்க தள்ளாடி
தள்ளி வருகிறார், பதினைந்து ஆண்டுகளாய் '
உப்'பென்று கத்திக்கொண்டு
காலியாகாத மூட்டையுடன்
ஒரு உப்புக்காரர்.

>>குப்பை வண்டிக்காரன் தாமதத்தை
தொண்டை கிழிய சொல்லிகொண்டிருந்தது ,
நிறைந்து வழிந்து ஈ மொய்த்து
கொண்டிருந்த குப்பை தொட்டி.

>>வெகு நேரமாய் அழுத்தி பிடித்திருந்த
ஜன்னல் கம்பி உறுத்தியதால்
அனிச்சையாய் கைகளை
நோட்டமிட்டதில் கம்பியின் தடமும்
என் ரசனைக்கு பலியாகி
இரு எறும்புகளின் சடலமும்,
பிரிய மனமில்லாமல் அடைத்து செல்கிறேன்

என் ஜன்னல் வழி உலகத்தை..

இதுவும் ஒன்று

ஒவ்வொரு முறையும் நான் கவிஞனாய்
பிரசவிக்கும் போதெலாம் -என் பிள்ளை
எவன் ஜாடையிலேனும் இருந்து விடுமோ
என்ற ஐயத்தில் கருக்கலைத்துவிட்ட
சில நூறு கவிதைகளில்
இதுவும் ஒன்று (கமலஹாசன்
,கண்களை ஒத்திருப்பதாக எண்ணி)..

Saturday, February 7, 2009

மனிதன்!!

மனிதன்!! மரண தண்டனையோடு பிறந்த ஆயுள் கைதி..

என்னையும் இழக்கிறேன்..


முதல் சந்திப்பு சின்ன இதழ் விரிப்பில் தொடங்கி ........
இது யார் பொருட்டோ , நானறியேன் , ஆன போதும் என் குறிப்பு இதோ.....

>>உன் அருகாமை இன்றி தொலைந்து போன இந்த காலபெறுவெளியெலாம், உன்னோடு நானிருக்கையில் நிகழ்ந்து முடிந்த நினைவு பிறள்களாய் இருந்தெழுந்து விட கூடாதா!! என்ற ஏக்கம், என் இதயத்தின் சிறு பகுதியை மட்டும் துடிப்பதற்காய் விட்டு விட்டு முழுதுமாய் அடைத்து கொண்டிருக்கிறது..

>>இந்த பொல்லா காலம் வலிகளை மட்டுமல்ல பல நேரம் உறவுகளையும் மரத்து மறக்கடித்து விடுகிறது, மறந்து மரத்தும் விட்ட அந்த நினைவுகள் சில நேரம் கண்ணமுதம் சுரக்க செய்யும்.. யாரோ யாரையோ "தம்பி!" எனும் போது..

>>உன் முகவரி தளத்தில் இருந்து ஒரேழுத்து கசிந்து விடாதா!! என்று நான் கண்புதைத்து காத்திருந்த - என் அதே மின் அஞ்சல்பெட்டியுள் உன் முழு நீள நிரலொன்று , எனக்காய் இரு நாட்கள் காத்திருக்க நேரிட்டதே!! >>வாழ்வின் இந்த பிழைப்பு போராட்டத்தால் (survival) நம் உறவுகள் பழுப்படைவதாய் என் நெஞ்சம் கனக்கிறது! வழி ஏதும் தெரிந்தால் சொல், நம் நாட்களை மீட்டு தர! உன்னை இழப்பதால் என்னையும் இழக்கிறேன்..


அக்கா!!
I MISS YOU!!